

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க யார் காரணம் என்பது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களிடையே கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க யார் காரணம் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
கே.பி.முனுசாமி (அதிமுக): தமிழகத்தில் 75 ஆண்டுகளில் வாங்கிய மொத்த கடன் தொகை ரூ.5 லட்சம் கோடி. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.5 லட்சம் கோடி கடன் வாங்கி, நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்திருப்பதாக உண்மைக்குப் புறம்பான தகவல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசுதான் அறிவித்துள் ளது. அதிமுக ஆட்சியில் இந்த வளர்ச்சி ஏற்படவில்லை. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில், சாதனை இலக்கை அடைந்திருக்கிறோம். இது இறுதி அல்ல, மீண்டும் நாங்கள்தான் வருவோம். மீண்டும் ஆட்சிக்கு வந்து பட்ஜெட் சமர்ப்பிப்போம்.
கே.பி.முனுசாமி: மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தோம்.
ஆனால், தற்போது திமுக அரசு வாக்குகளுக்காக, கல்லூரி முடிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கிறது.அதிமுக அரசு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததால், மருத்துவக் கல்லூரிகளில் ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் சேர முடிகிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இதில் பயனடையும் மாணவர்கள் 2026 மட்டுமல்ல, 2031 தேர்தலிலும் வாக்களிக்கப் போவதில்லை.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கருத்துருவை மத்திய அரசுக்கு அனுப்பியதே 2011-ல் முதல்வராக இருந்த கருணாநிதிதான். மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு சட்டத்தை அதிமுக அரசு இயற்றினாலும், அது ஆளுநர் மேஜையில் உறங்கிக்கொண்டிருந்தது. எங்கள் போராட்டத்தால்தான் அதற்கு செயல் வடிவம் கிடைத்தது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: உண்மைக்கு புறம்பான கருத்தை அமைச்சர் தெரிவிக்கிறார். சட்டப்பிரிவு 162-ஐ பயன்படுத்தி 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக அரசுதான். அரசு மாறும்போது, திட்டத்தை தொடர்வது வழக்கமானது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: பின்னர் ஏன் திமுக அரசு கொண்டுவந்த மதுரவாயல்-சென்னை துறைமுகச் சாலை திட்டத்தை முடக்கினீர்கள்? சட்டப் பேரவைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை ஓமந்தூரார் மருத்துவமனையாக ஏன் மாற்றினீர்கள்? அந்த திட்டங்களை தொடர வேண்டியது தானே?
பழனிசாமி: ஆற்றில் தூண்கள் கட்டுவதால், வெள்ளப் பாதிப்பு ஏற்படும். எனவே, திட்ட வடிவமைப்பைத்தான் மாற்றச் சொன்னோம். திட்டத்தை முடக்கவில்லை.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, ஏராளமான வண்ணத் தொலைக்காட்சிகளை மக்களுக்கு வழங்காமல், பூட்டிவைத்துப் பாழாக்கினீர்களே?
எஸ்.பி.வேலுமணி (அதிமுக): தாலிக்குத் தங்கம், அம்மா பரிசுப் பெட்டகம், மினி கிளினிக், அம்மா உணவகம் திட்டங்களை திமுக அரசு முடக்கியது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன்: தங்கம் விலை உயர்ந்த போது, தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக அளித்த 3.5 லட்சம் விண்ணப்பங்களை கிடப்பில் போட்டவர்கள்தானே நீங்கள்?
அமைச்சர் கே.என்.நேரு: அம்மா உணவகத்தை நாங்கள் முடக்கவில்லை. உங்கள் ஆட்சியைவிட சிறப்பாக அம்மா உணவகங்களை நடத்தி வருகிறோம்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: அம்மா உணவகப் பெயர் பலகையை சேதப்படுத்திய திமுகவைச் சேர்ந்த நபர் மீது வழக்கு தொடர்ந்து, புனரமைப்புக்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கியது திமுக ஆட்சி.
எஸ்.பி.வேலுமணி: அம்மா உணவக மேம்பாட்டுக்கு பழனிசாமி ரூ.100 கோடி ஒதுக்கினார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.