

சென்னை: “சி.வி.சண்முகம் அமைச்சர் பதவி என்ற சுகத்துக்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவின் கொறடாவாக நியமிக்கப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் 98 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் ஆகியோர் தங்களது தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ‘10 தோல்வி கண்ட பழனிசாமி’ என மு.க.ஸ்டாலின் சொல்வார். ஆனால் தற்போது அவர்தான் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.
நேற்று அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் சிறப்பாக நடந்தது. 78 மாவட்டச் செயலாளர்களில் 75 பேர் நேரடியாக பங்கேற்றனர். ஓட்டுமொத்த அதிமுகவினர் அதாவது 95 சதவீதம் பேர் பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். எடப்பாடியாரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.வி.சண்முகம் கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டார் என்பதற்காக தற்போது பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பொதுக்குழுவை கூட்டுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர். பின்னர், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் சி.வி.சண்முகம். அதன் பிறகு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளாராக பொறுப்பேற்ற பிறகு இழந்த மாவட்டச் செயலாளர் பதவியை அவருக்கு திரும்பக் கொடுத்தார் இபிஎஸ். 2021-ல் தோல்வியை சந்தித்த சி.வி.சண்முகம், வற்புறுத்திக் கேட்டதால் அவரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார்.
இப்படியாக, சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. வேலுமணி - சி.வி.சண்முகம் பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் தொகுதியில், சி.வி.சண்முகம் இடம் மாறி நிற்பதற்கு வாய்ப்பு கேட்டார். அதையும் எடப்பாடி பழனிசாமி பெருந்தன்மையோடு வழங்கினார். அந்த தேர்தலில் அவரால் பரிந்துரை செய்யப்பட்ட விழுப்புரம், வானூர், திண்டிவனம் சட்டமன்ற வேட்பாளர்கள் தோல்வியை தழுவினார்கள்.
இவர் மட்டுமே மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த மாவட்டத்தில் அதிமுக தோல்வியுறுவதற்கு இவர் தான் காரணம். அதிமுகவின் வளர்ச்சிக்காக எந்தவித பணியையும் மேற்கொள்ளவில்லை. தனது சுயநலத்துக்காக, சுய லாபத்துக்காக இன்று நாம் யாரை எதிர்த்துப் போட்டியிட்டோமோ அவர்களுடன் இணைந்து அமைச்சர் பதவி என்ற சுகத்துக்காக இந்த இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்” இவ்வாறு அவர் கூறினார்.