

ஓ.எஸ்.மணியன்
சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. பின்னர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம் என பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் கடந்தகாலமற்றும் நிகழ்கால அரசியல் சூழல்கள் குறித்த தங்களுடைய கருத்துகள், அனுபவங்கள் மற்றும் விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைத்தனர்.
நிர்வாகிகளின் கருத்துகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பொதுச்செயலாளர், வருங்காலத்தில் இதுபோன்ற கருத்து கேட்புக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும். நிர்வாகிகளின் ஆலோசனைகளைக் கேட்போம் என உறுதியளித்தார். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.