4 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என அதிமுக வழக்கு - அரசு தரப்பு சொல்வது என்ன?

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த நிலையில், அந்த 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு கொண்டுவந்த பெரும்பான்மை வாக்கெடுப்பின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரவைத் தலைவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளபோது, அவர்களின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “4 எம்எல்ஏக்கள், தவெகவில் இணைவது குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராஜினாமா செய்ததும், தவெகவில் இணைந்துள்ளதால், இது திடீரென எடுத்த முடிவெல்ல.

இதில் அரசியல் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதால், ராஜினாமாவை ஏற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதிக்கக் கோரியும் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், அந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 21 பேரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கடிதம் அளித்தார். அதனால் அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்த 4 பேரும் தாமாக முன்வந்து பதவி விலகியுள்ளனர். இருப்பினும், தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதிப்படி, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
“ஜோசப் விஜய் ப்ரோ... எத்தனை நாள் உங்கள் ஆட்சி தாங்கும்?” - நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in