

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் செப்.6-ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர். சி.வி.சண்முகம் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செப்.6-ம் தேதி 10 மணிக்கு, பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் கட்சி செயற்குழுவை கூட்டுவது, பின்னர் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.