

முதல்வர் விஜய்
ஊட்டி: விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்றால் தவெக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என மேலிட பார்வையாளர் அசோகன் சாலமன் ஊட்டியில் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் மறு சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 77 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஒன்றிய தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், 10 வாக்குச்சாவடிகள் அடங்கிய மண்டல கமிட்டி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் மாவட்ட தலைவர் டி.நாகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், கட்சியின் மேலிட பார்வையாளர் அசோகன் சாலமன் கலந்துகொண்டு இயக்க மறுசீரமைப்பு திட்டம் குறித்து விளக்கி, நிர்வாகிகள் தேர்வுக்கான விருப்ப மனுக்களை வழங்கினார். கூட்டம் முடிந்த பிறகு அவரிடம், விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பது அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் கருத்து.
ஒரு கட்சியில் இருப்பவர்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்த சில கருத்துகளை கூறுவார்கள். அது அமைச்சர்களாக கூட இருக்கலாம், அதை அவர்கள் தவிர்த்திருக்கலாம். இந்த கருத்து தவெகவின் நிலைப்பாடாக தெரியவில்லை. அப்படி இருந்தால் தவெக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகும்” என்றார்.