

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில்...
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 7,988 பேரிடம் பொதுச்செயலாளர் பழனிசாமி வரும் ஜன.9-ம் தேதி முதல் நேர்காணல் நடத்த உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அதிமுக, இத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கடந்த டிச.15 முதல் 23-ம் தேதி வரையும், 28 முதல் 31-ம் தேதி வரையும் விருப்ப மனுக்களை பெற்றது. இதில் மொத்தம் 10 ஆயிரத்து 175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதில் 2,187 மனுக்கள், பொதுச்செயலாளர் பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டி 7,988 மனுக்களும் பெறப்பட்டன.
இந்நிலையில், இவர்களிடம் ஜன.9 முதல் 13-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் ஜன.9 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், விருப்ப மனு அளித்தவர்களின் தொகுதி மற்றும் வெற்றி வாய்ப்பு நிலவரங்களை அறிய, விருப்ப மனு அளித்தவர்கள் மட்டும், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல், நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்: தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்குழுவில் உள்ள, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, ஓ.எஸ்.மணியன், மகளிரணி செயலாளர் பா. வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், இலக்கிய அணி செயலாளர் எஸ்.எஸ்.வைகைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில், பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து தரவுகளை சேகரித்து ஆகச்சிறந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் ஜன.7 முதல் 20-ம் தேதி வரை 9 மண்டலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன்படி, ஜன.7-ம் தேதி வேலூர், சேலம் மண்டலங்களிலும், 8-ம் தேதி விழுப்புரம், திருச்சி மண்டலங்களிலும், 9-ம் தேதி தஞ்சாவூர், சிவகங்கை மண்டலங்களிலும், 11-ம் தேதி மதுரை, திருநெல்வேலி மண்டலங்களிலும், 19-ம் தேதி கோவை மண்டலத்திலும், 20-ம் தேதி சென்னை மண்டலத்திலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்க உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.