

திருப்புவனம்: அதிமுகவினர் தொடர்ந்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: அதிக இடங்களை பிடித்த தவெகவுக்குச் தான் சட்டப்படி ஆட்சி அமைக்க உரிமை இருக்கிறது. தவெகவால் ஆட்சி அமைக்காமல் போயிருந்தாலும் திமுக, அதிமுகவால் ஆட்சி அமைக்க வாய்ப்பே கிடையாது.
குடியரசுத் தலைவர் ஆட்சி தான் அமைந்திருக்கும். அது கிட்டத்தட்ட பாஜக ஆட்சி தான். அதை அனுமதிக்கக் கூடாது என்பதற்காக தான் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம்.
மதச்சார்பின்மை கொள்கையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டேன் என்ற உறுதி மொழியை விஜய் எங்களிடம் அளித்துள்ளார். அதை ஆளுநர் உரையிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எந்த நேரத்திலும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்ற அச்சம் தேவையில்லை. எங்கள் மீது திமுக நண்பர்கள் கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறு பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொகுதியில் வாக்களித்த மக்களை மதிக்காமல் தேர்தல் முடிந்த 20 நாட்களில் ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறுவதை ஏற்கமுடியாது. அதிமுகவினர் தொடர்ந்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இதை தவெக ஊக்குவிக்கக் கூடாது. கனிம வளங்களை அரசே விற்பனை செய்தால் வருவாய் கிடைக்கும். மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வருவாயை பெருக்குவது குறித்து அரசு யோசிக்க வேண்டும்.
பட்ஜெட்டில் வருவாயை பெருக்குவதற்கான புதிய திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். போதை இல்லாத தமிழகம் என்பதை 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும். பாலியல் குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண்களை மதிக்கும் பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.