Published : 29 May 2023 06:28 PM
Last Updated : 29 May 2023 06:28 PM

சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் - பஸ் கிடைக்காமல் மக்கள் அவதி

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: தனியார் ஏஜென்சிகள் மூலம் போக்குவரத்து துறையில் ஆட்கள் சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் உள்ள 33 போக்குவரத்து பணிமனைகளில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை மாலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர், பேச்சுவார்த்தையில் அரசு அளித்த உறுதியை ஏற்று வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.

தனியார் ஏஜென்சிகள் மூலம், போக்குவரத்து துறையில் ஆட்கள் சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் உள்ள 33 போக்குவரத்து பணிமனைகளில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக, சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை மற்றும் ஆலந்தூர் உள்பட சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் வரும் 33 பணிமனைகளிலும் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவுட் சோர்ஸிங் முறையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஆட்கள் பணியமர்த்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம், போக்குவரத்துக் கழகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

திங்கள்கிழமை மாலை நேரத்தில் நடக்கும் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக சென்னையில் பேருந்து போக்குவரத்து சிறிது நேரம் முற்றிலுமாக முடங்கியது. பணிக்குச் சென்று திரும்பும் பெண்கள், இளைஞர்கள், முதியோர் உட்பட பொதுமக்கள் பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். பின்னர், பேச்சுவார்த்தையில் அரசு அளித்த உறுதியை ஏற்று வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. அதன்பின் வழக்கம்போல் பேருந்துகள் இயங்கின.

போராட்டம் ஏன்? போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு செய்யக்கூடாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. சிஐடியூ சார்பிலும், இந்த ஆட்சேர்ப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து பணியாளர்களை நியமிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் வேலைநிறுத்த நோட்டீஸ் சில மாதங்களுக்கு முன்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 90 ஓட்டுநர், நடத்துநர் நியமிக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை மாலை சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொமுச பங்கேற்பு.. இந்தப் போராட்டத்தில் குறிப்பாக ஆளுங்கட்சியின் போக்குவரத்து தொழிற்சங்கமான தொமுச பங்கேற்றதன் காரணமாக சென்னை முழுவதும் திங்களன்று மாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள 33 போக்குவரத்து பணிமனைகளிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தை... போராட்டம் குறித்த தகவல் கிடைத்தவுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் ஒருமணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினர். இதனால் சென்னையில் போக்குவரத்து சீரானது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அன்புமணி வலியுறுத்தல்: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 30 பணிமனைகளில் பத்து பணிமனைகளில் தனியார் மூலம் ஓட்டுநர்கள் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டிருப்பதுதான் மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போராட்டத்திற்கு காரணம் ஆகும். குத்தகை குறையில் தனியார் ஓட்டுநர்கள் அமர்த்தப்படுவதற்கு பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதை மதித்து, அந்த முடிவை நிர்வாகம் கைவிட்டிருந்தால் இந்த திடீர் வேலைநிறுத்தம் ஏற்பட்டிருக்காது.

தனியார் மூலம் ஓட்டுநர்களை நியமிக்கும் முறை கைவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திடீர் போராட்டத்தை கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழக நிர்வாகமும், பணியாளர்களும் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x