குடியரசு தலைவர் வெளிநாட்டு பயணம் - கிண்டி மருத்துவமனை திறப்பு விழா தள்ளிவைப்பு

குடியரசு தலைவர் வெளிநாட்டு பயணம் - கிண்டி மருத்துவமனை திறப்பு விழா தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா, குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிகளுக்கு 2022-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

51,429 சதுரமீட்டர் பரப்பில்..: தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன், 51,429 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, இதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடனும், 1,000 படுக்கை வசதிகளுடனும் அமைந்துள்ளது.

‘கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை’ என்றுபெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்துவைப்பதாக இருந்தது. இதற்காக அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணியும், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவரின் சென்னை வருகை பயணம் ரத்தாகி உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால், குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து ஆகியிருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால், இதை மறுத்துள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குடியரசுத் தலைவர் ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதனால், மருத்துவமனை திறப்பு விழாவை தள்ளிவைக்குமாறு ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

ஜூலை முதல் வாரத்துக்குள்...: எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஜூலை முதல் வாரத்துக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in