பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம்

பெட்ரோல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டை மாற்றலாம்
Updated on
1 min read

சென்னை: இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதையடுத்து, வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்தால் பெட்ரோல் நிலையங்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொண்டு வரும் வாகன ஓட்டிகளை திருப்பி அனுப்பக் கூடாது. அந்த வாகன ஓட்டிகளிடம் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசலை போடுமாறு அறிவுறுத்த வேண்டும்.

இதன்மூலம் சில்லறை பிரச்சினையைத் தீர்க்கலாம். அத்துடன், ரூ.10 ஆயிரத்துக்கு எரிபொருள் நிரப்ப ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செலுத்தும் வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்களைப் பெற வேண்டும்.

மேலும், டீலர்கள் தங்களது தினசரி விற்பனையை விட கூடுதல் பணத்தை வங்கிகளில் தினசரி செலுத்த வேண்டாம். குறிப்பாக, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செலுத்த வேண்டாம். அவ்வாறு செலுத்தினால் வருமானவரித் துறையின் கண்காணிப்பில் சிக்க நேரிடும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in