

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல், மக்கள் பிரதிநிதிகள், ஆதீனங்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கராக அரும்பெரும் ஆன்மிகப் பணிகள், திருப்பணிகள் ஆற்றியதோடு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னின்று நடத்தி தலைசிறந்த ஆன்மிகவாதியாகத் திகழ்ந்தவர் கருமுத்து கண்ணன்.
கடைக்கோடி மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற கல்வி வளர்ச்சிப் பணிகள், தொழில் மேம்பாட்டுப் பணிகள் ஆற்றிய சமூகச் சிந்தனையாளர். அவரது மறைவு ஆன்மிக உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்" என பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.