

சென்னை: சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட்களை பெற வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்ற லீக் போட்டிகளை கண்டுகளிக்க வந்த ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்புச் சலுகை வழங்கியது.
அதாவது, ஐபிஎல் போட்டிகளுக்கான பார்கோடு போடப்பட்ட டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்தனர். இச் சலுகையை சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து வழங்கியது.
தற்போது, லீக் கிரிக்கெட் போட்டிகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து நடக்க இருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் சுற்றுகள் முற்றிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஐபிஎல் டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் பயணச் சீட்டாகப் பயன்படுத்த இயலாது.
எனவே, சென்னை, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றும், நாளையும் (மே 23, 24) நடைபெறவுள்ள ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளைக் கண்டுகளிக்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு வழக்கமான மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இடையூறு இல்லாத பயணத்துக்கு பயணிகள் மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை வாட்ஸ்-அப் (91-8300086000), க்யூஆர் அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம், ஏனெனில், டிக்கெட் கவுன்ட்டர்கள் இரவு 11 மணிக்குப் பிறகு செயல்படாது.
நள்ளிரவில் மெட்ரோ ரயில்: சென்னையில் போட்டி நடைபெறும் இன்றும், நாளையும் (மே 23, 24) இரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பச்சை வழித்தடத்தில் பயணிப்பதற்கு பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறிக் கொள்ளலாம். ஏனெனில், நீல வழித்தடத்திலிருந்து பச்சை வழித்தடத்துக்கு பயணிகள் மாறும் வசதி ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரவு 11 மணிக்குப் பிறகு இருக்காது.
ஆகையால் நீல வழித்தடத்திலிருந்து பச்சை வழித்தடத்துக்கு மாறும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறிக்கொள்ள வேண்டும். இந்த தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.