

நாமக்கல்: ஜேடர்பாளையத்தில் குடிசைக்கு தீ வைத்த சம்பவத்தில் காயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் நேற்று உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது வெல்ல உற்பத்தி ஆலையில் உள்ள குடிசைக்கு கடந்த 13-ம் தேதி மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதில், குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ரோஹித் (எ) ராஜேஷ் (19), சுகிராம் (28), எஸ்வந்த் (18), கோகுல் (23) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து சரளைமேடு சுற்றுவட்டார கிராமங்களில் பதற்றமான சூழல் உருவானது. அசம்பாவிதம் தவிர்க்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.
மேலும், 15 தற்காலிக சோதனைசாவடிகள், வெல்ல உற்பத்தி ஆலை அருகே கண்காணிப்பு கோபுரம், சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தவிர, குடிசைக்கு தீ வைத்த மர்ம நபர்களை கண்டறிய மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் உத்தரவின் பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே கரூர் மாவட்டஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரோஹித் (எ) ராஜேஷ் (19) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.