

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். பல இடங்களில் பொதுமக்கள் சாலையில்இறங்கி போராட்டம் நடத்தியதோடு, மின்வாரியஅலுவலகங்களை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், சென்னையில் சீரான மின் விநியோகத்தை மேற்கொள்வது குறித்து, மின்வாரிய அதிகாரிகளுடன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின்தேவை கடந்த 2 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த தினசரி மின்தேவை 16,481 மெகாவாட் அளவாக இருந்தது. தற்போது 2023-24-ம் ஆண்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 19,387 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் உச்சபட்ச மின்நுகர்வு ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒருநாள் மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த 2019-20-ம் ஆண்டில் 369 மில்லியன் யூனிட் அளவு மட்டுமேஇருந்தது. மின்தேவை அதிகரித்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது.
சென்னையில் அதிகபட்ச மின்தேவை கடந்த 2019-20-ம் ஆண்டில் 3,738 மெகா வாட்டாக இருந்தது. தற்போது 4,016 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது.சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4,749ஆர்எம்யூ கருவிகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவைதவிர, 3,447 மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 13 துணை மின்நிலையங்களும் அமைக்கப்பட்டு கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மின்கேபிள்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. அதிகரித்து வரும் மின்தேவையை விநியோகம் செய்யும் அளவுக்கு அவற்றின் திறன் இல்லை. எனவே, புதிய கேபிள்கள் அமைக்க வேண்டிஉள்ளது. அவை எந்தெந்த இடங்களில் அமைக்கவேண்டும் என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் கருத்துரு அனுப்புமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, சென்னையைப் பொறுத்தவரை வரும் ஆண்டுகளில் மின்தேவை அதிகரித்தாலும் எவ்விதத் தடையும் இன்றி சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இந்த ஆண்டுக்கான மின் தேவையைப் பூர்த்திசெய்ய 3 மாதத்துக்கான மின்சாரம் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது. இந்த கோடைக்காலத்தில் எவ்வளவு மின்தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இரவு நேரங்களில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின்விநியோகத்தில் ஏதேனும்பழுது ஏற்பட்டால் நேரில் சென்றுசரி செய்யுமாறு செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (விநியோகம்) சிவலிங்க ராஜன், மின்தொடரமைப்புக் கழக நிறுவன மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.