கோயில் நிலத்தை கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்க தடை கோரிய வழக்கு: செங்கல்பட்டு ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோயில் நிலத்தை கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்க தடை கோரிய வழக்கு: செங்கல்பட்டு ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: திருவிடந்தை பொன்னியம்மன் கோயில் நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்க தடை கோரிய வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆண்டி ரத்தினம் என்பவர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், "செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் நித்திய கல்யாண பெருமாள் கோயில், பொன்னியம்மன் கோயில் கங்கையம்மன் கோயில் உள்பட ஐந்து கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கோயில் பூஜைகள் உள்ளிட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை கோயில் நிலம் என வகைப்படுத்தி, பட்டா வழங்கப்பட்டுள்ளது. பொன்னியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3 ஏக்கர் 20 செண்ட் நிலத்தை தவறாக அனாதீனம் நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொன்னியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அனாதீனம் நிலம் என தவறாக வகைப்படுத்தியதை மாற்றி, பட்டா வழங்க கோரி அரசுக்கு மனு அளித்துள்ளோம்.

இந்தநிலையில், திடீரென அந்த நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்குவது தொடர்பாக திருப்போரூர் தாசில்தாரர் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, கோயில் நிலத்தை மூன்றாம் நபருக்கு ஒதுக்க தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஜூன் 13ம் தேதிக்குள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், திருப்போரூர் தாசில்தாரர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in