

கொடைக்கானல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை ஆய்வு செய்தார்.
மூன்று நாள் சுற்றுப் பயணமாக நேற்று கொடைக்கானலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். மாலையில் காரில் கொடைக்கானல் ஏரியைச் சுற்றி பார்த்தார். இரவு கோகினூர் மாளிகையில் தங்கிய அவர், இன்று (மே 15) காலை 8.30 மணி அளவில் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா கார்டனில் அவரது மனைவி லட்சுமியுடன் பார்வையிட்டார்.
அப்போது பூங்கா பராமரிப்பு பணியாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து, சூரிய ஆராய்ச்சி ஆய்வு கூடத்தை பார்வையிட்டு, ஆய்வுகள் தொடர்பாக கேட்டறிந்தார். இதையடுத்து, காலை 11.30 மணிக்கு அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்தார். அங்கு அவரை, பல்கலைக் கழக துணை வேந்தர் கலா, பதிவாளர் ஷீலா பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.
பழங்குடி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து வரவேற்பு அளித்தனர். பழங்குடி மக்களின் வீடு போல் அமைக்கப்பட்டிருந்த குடிலுக்குள் சென்று ஆளுநர் பார்வையிட்டார். அப்போது பழங்குடி மக்கள் உண்டு உறைவிடப் பள்ளி அமைத்து தர வேண்டும் உட்பட 3 அம்ச கோரிக்கைகளை ஆளுநரிடம் வைத்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அன்னை தெரசா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என். ரவி, பின் பல்கலைக் கழக நிர்வாகம், கல்வி சார்ந்த செயல்பாடுகள், வழக்கமான பணிகள், தேர்வு முடிவுகள், மாணவர்களின் வேலை வாய்ப்புகள் தொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். பல்கலை வளாகத்தில் முதுகலை இயற்பியல் துறை ஆய்வகத்தை திறந்து வைத்து, காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இதையடுத்து, பல்கலை மாணவிகளுடன் கலந்துரையாடினார்.