

சென்னை: அவதூறு வழக்கில் அண்ணாமலைக்கு நிச்சயமாக தண்டனை பெற்று தரப்படும் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதன்படி, அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தாக்கல் செய்த பின்பு, சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அண்ணாமலை சொன்ன அவதூறு கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். திமுக யார் மீதும் பொய் வழக்கு போடாது. நிச்சயமாக அண்ணாமலைக்கு தண்டனை பெற்று தரப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும். சட்ட ரீதியாக தற்போது வரை அண்ணாமலை எந்த பதிலும் அளிக்கவில்லை. திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது வரலாறு." இவ்வாறு அவர் கூறினார்.