Published : 12 May 2023 03:40 AM
Last Updated : 12 May 2023 03:40 AM

புகையிலை தயாரிப்புக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது - `ஹான்ஸ்’ தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: பொதுநலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலை தயாரிப்புக்குத் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்ற நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது நிறுவனம் `ஹான்ஸ்’ என்ற பாக்கெட் பொருளை இறக்குமதி செய்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்பனை செய்து வருகிறது. ஹான்ஸ் பொருளை இறக்குமதி செய்வதற்காக, உரிய வரி செலுத்தி வருகிறோம். ஆனால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஹான் ஸுக்கு தடை விதித்து, அவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஹான்ஸை விற்பனை செய்வது சட்டப்பூர்வமானது என்பதால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் இதற்குப் பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், இதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘‘உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் ஹான்ஸில் 1.8 சதவீத நிகோடின் கலந்துள்ளது என்பதால், அதை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது. புகையிலைப் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது’’ என்று வாதிடப்பட்டது,

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மக்களின் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களைத் தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், தடை விதிக்கும் முன்பாக உரிய மதிப்பீடு மற்றும் அறிவியல்பூர்வமான ஆய்வுகளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் தொழில் அல்லது வர்த்தகம் மேற்கொள்வதற்கான அடிப்படை உரிமை என்பது, அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுதான்.

சுகாதாரத்தைப் பாதுகாக்கும் கடமை: அதேநேரத்தில், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் பொதுநலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலைத் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே, ஹான்ஸுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ள நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x