இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் 10 பேர் தனுஷ்கோடி வருகை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்த தமிழர்கள் 10 பேரை, மண்டபம் மெரைன் போலீஸார் மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை அருகே 1-ம் எண் மணல் தீடையில் நேற்று வந்திறங்கிய இலங்கையைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 10 பேரை மெரைன் போலீஸார் மீட்டனர். இதில், 75 வயது மூதாட்டியும் ஒருவர்.

இவர்களை, மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கிருந்து இந்தியா வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள், இலங்கை முல்லைத் தீவிலிருந்து மே 5-ம் தேதி கள்ளப்படகில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு அரிச்சல்முனை மணல் தீடையில் இறக்கிவிடப்பட்டதாகவும், இதற்காக ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம், மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின், இதுவரை 255 பேர் ராமேசுவரம் பகுதிக்கு வந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in