ஒப்பந்த முறையில் ஓட்டுநர் நியமனத்துக்கு எதிர்ப்பு: தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தை சிஐடியு முற்றுகை

விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட சிஐடியு சங்கத்தினர். படம்: பு.க.பிரவீன்
விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட சிஐடியு சங்கத்தினர். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்தஅடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, சிஐடியுதொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. அப்போது ‘‘ஒப்பந்தஅடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். பணி நியமனத்தில் பழைய நடைமுறை தொடராவிட்டால், குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தொழிலாளர் நலத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் நியமனம் தொடர்ந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை சிஐடியுதொழிற்சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு அரசுபோக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் துரை தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எம்.கனகராஜ், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், போக்குவரத்து சம்மேளனத் துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், மாநகர அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்புபொதுச் செயலாளர் வீரராகவன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டங்கள் கலந்து கொண்டவர்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைக் கண்டித்தும், போக்குவரத்து நிர்வாகத்துக்கு தொழிலாளர் நலத் துறை ஆதரவாக செயல்படக் கூடாது என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

பின்னர், தொழிலாளர் நலத் துறை ஆணையர் அதுல் ஆனந்தை, சிஐடியு நிர்வாகிகள் சந்தித்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்த சிஐடியு சங்கத்தினர், இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்கள் கட்டாயம் பங்கேற்குமாறு தொழிலாளர் நலத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in