

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு பிரத்யேக மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 3 ஆயிரம் பேரும்,புறநோயாளிகள் பிரிவில் தினமும்12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான தனித்தனி மருந்தகங்கள் உள்ளன.
இந்நிலையில், சிகிச்சை முடிந்துவீடு திரும்பும் நோயாளிகள் வசதிக்காக ஒரே இடத்தில் பிரத்யேக மருந்தகம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை டீன் தேரணிராஜன் முன்னிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பெண் ஒருவர், அந்த மருந்தகத்தை திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக டீன் தேரணிராஜன் கூறும்போது, “இந்த அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கும் தனித்தனியாக சிகிச்சை, வார்டுகள், மருந்தகங்கள் உள்ளன.
இதில், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் தேவையான மருந்துகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் ‘வீடு திரும்பும் உள்நோயாளிகள் மருந்தகம்’ திறக்கப்பட்டுள்ளது.
இதில், அனைத்து சிகிச்சை பிரிவில் இருந்தும் வீடு திரும்புவோர் நண்பகல் 12 முதல் 6 மணிவரை மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம். இங்கு, 15 நாட்களுக்கான மருந்துகள் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக இங்குதான் பிரத்யேக மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.