Published : 06 May 2023 04:03 AM
Last Updated : 06 May 2023 04:03 AM

சுயமரியாதை திருமணம் செய்து வைக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: பார் கவுன்சிலுக்கு ஐ-கோர்ட் உத்தரவு

மதுரை: சுய மரியாதை திருமணம் செய்து வைக்கும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணையைச் சேர்ந்த இளவரசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு: மோர் பண்ணையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தேன். அவருக்கு 16 வயதில் அவருடைய தாய்மாமாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல மையத்துக்கு புகார் அளித்தேன். அதிகாரிகள் அனைவரையும் அழைத்து விசாரித்து சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என பெற்றோரிடம் எழுதி வாங்கி அனுப்பினர். இருப்பினும் அதை மீறி அவரைபிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்தி, தாய் மாமாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி எனது வீட்டுக்கு வந்து என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

நானும், அவரும் திருப்பூரில் வழக்கறிஞர் ஒருவர் நடத்தி வரும் அம்பேத்கர் சுயமரியாதை திருமண மையத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில், பெண்ணை நான் கடத்தியதாக அவரது பெற்றோர் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணைக்கு இருவரும் ஆஜரானோம்.

பின்னர் எனது மனைவியை, `பாட்டி முடியாமல் இருப்பதால் அவரைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு' கூறி அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவரை வீட்டைவிட்டு அனுப்பாமல் தனி அறையில் சிறை வைத்தனர். இப்போது எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மனைவியை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘சம்பந்தப்பட்ட பெண்ணை கடத்தியதாக ஏற்கெனவே ஒருமுறை புகார் அளிக்கப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது தன்னை யாரும் கடத்தவில்லை, என்றார். இதனால் அவரை பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

குழந்தைத் திருமணமாக இருந்தாலும், அந்தத் திருமணத்தை ரத்து செய்த பிறகே மறுமணம் செய்ய முடியும் என்றார். இதையடுத்து ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இதனால் மனுதாரருக்கு சுய மரியாதை திருமணம் செய்து வைத்த வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி அவர் மீது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கறிஞர்கள் வேறு யாரேனும் இவ்வாறு செயல்படுவது தெரியவந்தால் அவர்கள் மீதும் பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x