புளூவேல் ஆன்லைன் விளையாட்டை தடை செய்க: மத்திய அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

புளூவேல் ஆன்லைன் விளையாட்டை தடை செய்க: மத்திய அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Updated on
1 min read

புளூவேல் (Blue Whale) எனும் ஆன்லைன் விளையாட்டை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய மின்னணு -  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகிய இரு மத்திய அமைச்சர்களுக்கும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், "சமூக வலைதளங்களில் இலவசாமக கிடைக்கும் ‘புளூவேல்’ என்ற அபாயகரமான விளையாட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழ்நிலையை, தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தங்களது கவனத்திற்கு கொண்டுவர இந்த கடிதத்தை எழுதுகிறேன். 50 சவால்கள் மூலம் இந்த உயிரைப் போக்கும் விளையாட்டு குழந்தைகளின் மனதை உணர்ச்சிகரமாக தூண்டிவிடுகிறது. இந்த 50 சவால்களில், கடைசி சவால் அந்த விளையாட்டை உருவாக்கியவரின் வழிகாட்டுதலுடன் குழந்தைகளை தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறது.

இந்த நாட்டின் எதிர்காலமாக விளங்கும் குழந்தைகள் இந்த  மோசமான சவால்கள் அடங்கிய விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, அவர்களுக்குள் தற்கொலை எண்ணங்களை தூண்டி   விபரீத சம்பவங்கள் நிகழ காரணமாக  அமைந்து விடுகிறது.

தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் துவங்கி  தற்கொலை செய்துக்கொள்ளுதல் போன்ற கடைசி சவாலால் குழந்தைகள் உயிரிழப்பது மட்டுமின்றி  பெற்றோர்களும் உறவினர்களும் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகிறார்கள். ஏற்கனவே பல குழந்தைகள் இப்படி தங்களுக்கு தாங்களே காயம் ஏற்படுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விளையாட்டின் சவால்களை தொடர்ந்து விளையாடி, அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற 19 வயது இளைஞரும், பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் படித்துவந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சசிகுமார் பேரா என்ற முதலாமாண்டு மாணவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு டிஜிட்டல் விளையாட்டு இளைஞர்களின் மனதில் உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, இரக்கமின்றி அவர்களுடைய எதிர்கால கனவுகளை சிதைக்கிறது என்பது கடும்  வேதனையை தருகிறது.

இந்த அபாயகரமான விளையாட்டுக்கான பதிவிறக்க சுட்டிகளை இணையத்தில் இருந்து உடனடியாக அகற்றுமாறு ஏற்கனவே இந்திய அரசு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தாலும், இன்னுமும் இந்த விளையாட்டு இணையத்தில் இருந்துகொண்டு அவர்களின் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்

ஆட்சியில் இருந்தபோது ததமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையில், இந்த ‘அபாயகரமான விளையாட்டை’ சமூக வலைதளங்களில் உடனடியாக  முடக்கி, நம் நாட்டின் எதிர்காலச் சிற்பிகளான குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இணைய பயன்பாட்டாளர்கள் அதிகமுள்ள மாநிலம் என்ற முறையிலும், நம்முடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்திலும் இதுபோன்று ஆபத்துகள் நிறைந்த விபரீத விளையாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தும் என நான் நம்புகிறேன்"

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in