சென்னை பெருநகரின் 3-வது மாஸ்டர் பிளான் தயாரிப்பு: இதுவரை 47,000 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்

சென்னை பெருநகரின் 3-வது மாஸ்டர் பிளான் தயாரிப்பு: இதுவரை 47,000 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்
Updated on
1 min read

சென்னை: சென்னை பெருநகரின் 3-வது பெருந்திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிப்பதற்கான மக்கள் கருத்துக் கேட்பில் இதுவரை 47,095 பேர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை பெருநகரின் முதல் மாஸ்டர்பிளான் கடந்த 1976-ம் ஆண்டும், 2-வதுமாஸ்டர் பிளான் கடந்த 2008-ம் ஆண்டும்தயாரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில்தான் தற்போது வரை அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் சென்னை பெருநகரின் எல்லையானது விரிவுபடுத்தப்பட்டு 1,189 சதுர கிமீ பரப்பு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிக்கான 3-வது மாஸ்டர் பிளான் அதாவது 2046-ல் சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த மாஸ்டர் பிளான் வரும் 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.

இதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட்ட நிலையில், சென்னையின் 29 மண்டலங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தி கருத்துகள், விருப்பங்கள் பெறப்படுகின்றன.

ஆவண விழிப்புணர்வு கையேடு: குறிப்பாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகள், ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசுஅலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நேரடியாகவும் வலைதளங்கள் மூலமாகவும் சிஎம்டிஏ கருத்துக் கேட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்.10-ம்தேதி சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் சென்னை பெருநகர 3-வது பெருந்திட்ட தொலைநோக்கு ஆவண விழிப்புணர்வு கையேட்டை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொதுமக்களிடம் வழங்கினார்.

தொடர்ச்சியாக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சென்னை சென்ட்ரல்மெட்ரோ, எழும்பூர், ஓமந்தூரார் மெட்ரோரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான க்யூஆர் கோடு கொண்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதை தங்கள் கைபேசியில் பொதுமக்கள் ஸ்கேன் செய்து, தங்கள் விருப்பத்தை உள்ளீடு செய்யலாம். இதுதவிர, இணையதளம் வாயிலாகவும் கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கருத்து கேட்பு தொடர்ந்து நடைபெறும்: அந்த வகையில் நேற்று முன்தினம் வரை, நீண்ட வினாக்கள், குறுகிய வினாக்கள் அடிப்படையில் இரு வகையாக நடத்தப்பட்டுள்ள இந்த கருத்துக் கேட்பில், ஆன்லைன், நேரடியான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் ஆலோசனை என்ற அடிப்படையில் 47,905 பேர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இனியும் சிஎம்டிஏ கருத்துக் கேட்பு தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் தங்களின் தேவைகள் அடிப்படையில் சென்னை பெருநகரம் எப்படிஅமைய வேண்டும் என்பதற்கான கருத்துகளை தெரிவிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in