தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கக்கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மகா சபை செயலர் ஜெயக்குமார் தாமஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

மத்திய மற்றும் மாநில அரசின் பாடத்திட்டங்களை பின்பற்றி தமிழகத் தில் கேந்திரிய வித்யாலயா, சைனிக், மாநில அரசின் முப்பருவ கல்வி முறை அடிப்படை யில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கல்வி திட்டத்துக்கும், மாநில அரசின் கல்வி திட்டத்துக்கும் வேறுபாடு உள்ளது. கல்விக்காக தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் 1986-ம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. உண்டு உறைவிட பள்ளியான நவோதயா பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்குகின்றன. 6 முதல் பிளஸ் 2 வரை இருபாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளது.

குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வகையில் செயல்படுகிறது. மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன.

ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களிலும் உள்ளது. இவ்வகை பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு போதிய இடங்களை கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, மாநில அரசு இரு மொழி கொள்கையை பின்பற்றுகிறது. மும்மொழி கொள்கையைப் பின்பற்றவில்லை என்றார். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஜூன் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in