

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சாலையைக் கடந்து சத்துணவு வாங்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
திருப்புவனம் அருகே கணக்கன்குடி பேருந்து நிறுத்தத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. பள்ளிக் கட்டிடம் சேதமடைந்ததால் 300 மீ. தூரத்தில் 6 முதல் 8-ம் வகுப்புக்கு மட்டும் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது.
தற்போது பழைய கட்டிடத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், புதிய கட்டிடத்தில் 6 முதல் முதல் 8-ம் வகுப்பு வரையும் நடந்து வருகின்றன. மேலும் சத்துணவு மையம் புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால், சத்துணவு வாங்க 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 30 மாணவர்கள் சாலையைக் கடந்து செல்கின்றனர்.
நேற்று முன்தினம் சாலையைக் கடந்தபோது 4-ம் வகுப்பு மாணவி காவியா (9) மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 6 மாதங்களில் 2 மாணவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். தற்போது மேலும் ஒரு மாணவி காயமடைந்துள்ளார். மதிய உணவு வாங்கச் செல்லும் மாணவர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து கணக்கன்குடி கிராம மக்கள் கூறுகையில், குழந்தைகள் சத்துணவு வாங்க சாலையைக் கடந்து செல்லும்போது விபத்தில் சிக்குகின்றனர். இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் இடத்திலேயே சத்துணவு வழங்க வேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றனர்.