சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏப்.22-ல் ஏவப்படும்
சென்னை: சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக்கோள், பிஎஸ்எல்விசி-55 ராக்கெட் மூலம் ஏப்.22-ம்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலை நிறுத்திவருகிறது. அதனுடன் வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.
அந்த வகையில் சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-55ராக்கெட் மூலம் ஏப்.22-ம் தேதிவிண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெலியோஸ்-2 செயற்கைக்கோளானது புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே டெலியோஸ்-1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் 2015-ம் ஆண்டு டிச.16-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
