Published : 13 Apr 2023 06:09 AM
Last Updated : 13 Apr 2023 06:09 AM

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு | பாஜக பிரமுகர்கள் 2 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜர்: ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது

சென்னை

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை அமைந்தகரை மேத்தா நகரைத் தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதை உண்மை என நம்பி அந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்து 9,255 பேர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி ஆருத்ரா நிறுவனம் நடந்து கொள்ளாமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து 11 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஆருந்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரீஷ் கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 11 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் ஹரிஷ் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.84 கோடி வரை பெற்று கொடுத்துள்ளதும், ஆனால், அவருக்கு ஆருத்ரா நிறுவனத்திலிருந்து ரூ.130 கோடி கொடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஹரீஷ் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்தபோது பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநில செயலாளராக இருந்துள்ளார். பாஜக கட்சியில் விளையாட்டு பிரிவில் மாநிலப் பொறுப்பை பெறுவதற்காக முதலீட்டாளர்களுக்கு தான் திருப்பித் தர வேண்டிய பணத்திலிருந்து அக்கட்சியைச் சேர்ந்த சில நபர்களுக்குப் பணம் கொடுத்ததாகவும் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி பணம் கொடுத்ததாகக் கூறப்பட்ட பல்லாவரத்தைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகிய இருவருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

இதை ஏற்றுக் கொண்டு இருவரும் நேற்று மாலை சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விரிவான பதில் அளித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் எனக் கூறிபோலீஸார் அனுப்பி வைத்தனர்.

பின்னர் வெளியே வந்த அலெக்ஸ் கூறுகையில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஆருத்ரா மோசடி வழக்கில் போலீஸார் குற்றப் பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். பாஜகவில் பணம் தந்து சேரும் நிலை இல்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x