

சென்னை: நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கி, ரத்து செய்யநடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து, தமிழகத்தில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தேவையை வலியுறுத்தியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.
தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் 5-ம் தேதி காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் எடுத்த துரித நடவடிக்கை காரணமாக மத்திய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பை ரத்து செய்தது.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளைவிலக்க மத்திய அரசை அரசை வலியுறுத்தி, ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தமைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. கே.வி.இளங்கீரன், நாகப்பட்டினம் - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவரும், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளருமான காவிரி தனபாலன், திருவாரூர் மாவட்டம் - காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளர் வி.சத்தியநாராயணா, மயிலாடுதுறை மாவட்டம் - காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத்தின் குரு கோபி கணேசன், நாகப்பட்டினம் மாவட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வி. சரபோஜி, தஞ்சாவூர் மாவட்டம் - கரும்பு விவசாயிகள் சங்கத்தின் வி.கோவிந்தராஜ், தஞ்சை விவசாய சங்கத்தின் வி.ஜீவகுமார் உட்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாகை மாலி, சிந்தனைச் செல்வன், கோ.அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.