வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி - தூத்துக்குடி காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி ஆஜர்

பிரசாந்த் உம்ராவ்
பிரசாந்த் உம்ராவ்
Updated on
1 min read

தூத்துக்குடி: வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் தூத்துக்குடி போலீஸார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டது போன்ற ஒரு வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பியதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(ஏ), 504, 505(1)(பி), 505(1)(சி), 505(2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரைகைது செய்வதற்காக திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் டெல்லிக்கு சென்றனர்.

இதனிடையே பிரசாந்த் உம்ராவ் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். அவர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்களுடன் காலை 10 மணிக்கு பிரசாந்த் உம்ராவ் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அங்கு திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, பிரசாந்த் உம்ராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வழக்கு பதிவுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளேன். விசாரணை நல்ல முறையில் நடைபெறுகிறது. எந்த தொந்தரவும் இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in