

சென்னை: சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள்மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாகவும், அவரது தொல்லை தாங்க முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில், அடையாறு போலீஸார் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாதவரத்தில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியானசெய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்துவழக்காகப் பதிவு செய்துள்ளது. மேலும், 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐஜி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.