

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை கும்டா மற்றும் சிஎம்டிஏ இணைந்து தொடங்கி உள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது.
இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேருந்து நிலையத்தின் தரைத் தளத்தில் கடைகள், உணவகம், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. முதல் தளத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் தங்குவதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானம் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தொடங்கி உள்ளது. இதன்படி நீங்கள் தென் தமிழகத்தில் உள்ள ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னையில் எந்த இடத்தில் இருந்து செல்வீர்கள், பேருந்து ஏறப்போகும் இடத்திற்கு செல்ல எந்த மாதிரியான போக்குவரத்து முறையை பயன்படுத்துவீர்கள், எந்த நேரத்திற்கு செல்வீர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல எந்த மாதிரியான போக்குவரத்து முறையை பயன்படுத்துவீர்கள் உள்ளிட்ட கேள்விகளுடன் ஆன்லைன் மூலம் கருத்து கேட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd31yiVkpoiAjwUVRFQaIKO2K4inLaZxa88zp65r4Qd9FOK4Q/viewform என்ற இணைப்பில் சென்று தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.