

கோவை: மிகச் சிறந்த ஆளுமையின்கீழ் இந்தியா கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ‘டைனமிக் இந்தியன் ஆப் தி மில்லேனியம்’, ‘பர்சனாலிட்டி ஆப் த டிகேட்’ விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டி கேஜி குழும வளாகத்தில் உள்ள கலையரங்கில் நேற்று நடந்தது. கேஜி அறக்கட்டளை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை வகித்தார்.
டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா, அப்போலோ மருத்துவமனை இதயவியல் நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு, ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி.பழனிவேலு, தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், கே.ஜி.மருத்துவமனை இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் யு.அருண்குமார், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் டாக்டர் ஏ.எல்.பெரியகருப்பன், கே.ஜி.மருத்துவமனை தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் டி.சி.ஆர்.ராமகிருஷ்ணன், கே.ஜி.மருத்துவமனை மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோருக்கு ‘டைனமிக் இந்தியன் ஆப் தி மில்லேனியம்’ விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன், ரத்னா குரூப்ஸ் தலைவர் பிஎல். கே.பழனியப்பன், லஷ்மி கேட்டரிங் தலைவர் நாகராஜ் ரங்கசாமி ஆகியோருக்கு ‘பர்சனாலிட்டி ஆப் த டிகேட்’ விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: விருது பெறும் மருத்துவர்கள், அச்சு ஊடகத்துறையினர், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைவரும் அவர்கள் சார்ந்து இருக்க கூடிய துறையில் சமுதாயத்துக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். நவீன இந்தியா உருவாகுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களை கவுரவிப்பதால் எதிர்காலத்தில் மேலும் பலர் அவர்களின் வழியை பின்பற்றி நடப்பார்கள்.
மிகச்சிறந்த ஆளுமையின்கீழ் இந்தியா கடந்த பத்தாண்டுகளில் அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்துள்ள புரட்சி மக்களுக்கு மிகுந்த பயனைத் தருகிறது.
உலகின் மையமாக இந்தியா திகழ்கிறது. உலகளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய தகுதியை கொண்டு விளங்குகிறது. பெண்கள் அதிகாரமளித்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.
சமூக நீதியைப் பற்றி பேசி வரும் நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்தது, பஞ்சாயத்து கூட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போதும் உரிய மரியாதை அளிக்கப்படாதது, தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களில் 93 சதவீத குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர் என்பன உள்ளிட்ட செய்திகள் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன.
ஜாதி, மத, இன பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா திகழும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கேஜி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் அசோக் பக்தவத்சலம் பங்கேற்றார்.