

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை, தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு நிராகரித்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அதில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை அதிமுக பொதுச் செயலாளராகபழனிசாமி பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்றுகாலை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.