ரோகிணி திரையரங்க ஊழியர்கள் 2 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கீழ் வழக்குப் பதிவு

ரோகிணி திரையரங்க ஊழியர்கள் 2 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கீழ் வழக்குப் பதிவு
Updated on
1 min read

சென்னை: நரிக்குறவர் இன மக்களை திரையரங்குக்குள் அனுமதிக்காத ரோகிணி திரையரங்க ஊழியர்கள் இருவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'பத்து தல' திரைப்படம் இன்று (மார்ச் 30) தமிழகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் இன மக்கள் வந்தனர். அப்போது அவர்கள் கையில் டிக்கெட் வைத்திருந்தும் அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியானது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதில், 'பத்து தல' படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து முதலில் கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைந்தகரை வட்டாட்சியர் திரையரங்கில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, டிக்கெட் இருந்தும் ரோகிணி திரையரங்குக்குள் படம் பார்க்க அனுமதிக்காத டிக்கெட் பரிசோதகர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in