

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் வார்டில் எலித் தொல்லை அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்-மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம் மருத்துவமனையின் ஒரு பகுதியில் பச்சிளங் குழந்தைகள் வார்டு உள்ளது.
இங்கு நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து தினசரி ஏராளமான பெண்கள் பிரசவத் துக்கு வருகின்றனர். இந்நிலையில், பச்சிளங் குழந்தைகள் வார்டில் எலித் தொல்லை அதிகரித்து வருவதாக அங்கு குழந்தைகளுடன் சிகிச்சை பெறும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக பெண்கள் சிலர் கூறியதாவது: பிரசவம் முடிந்து பச்சிளங் குழந்தைகளுடன் வார்டில் அனுமதிக்கப்படும் பெண்களின் உடைமைகள், குழந்தைகளுக்கான மெத்தை விரிப்புகள், தலையணை மற்றும் உணவுப் பொருட்களை அங்கு உலவும் எலிகள் கடித்து நாசம் செய்கின்றன.
எலிகளின் கழிவுகள் குழந்தைகளின் மெத்தை விரிப்புகளில் பட்டு துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தினர் எலித் தொல்லையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.