பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவச பயணம்: விவரத்தை பதிவு செய்ய வேண்டும் நடத்துநர்களுக்கு உத்தரவு

பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவச பயணம்: விவரத்தை பதிவு செய்ய வேண்டும் நடத்துநர்களுக்கு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: விரைவுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளின் விவரத்தைப் பதிவு செய்யுமாறு பேருந்து நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த ஆண்டு மே 5-ம் தேதி, 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பேரவையில் தெரிவித்தார். இதையடுத்து, அன்று முதல் விரைவுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் விரைவுப் பேருந்துகளில்பயணித்த குழந்தைகளின் விவரத்தை அரசுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வரும் காலங்களில் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இலவசமாகப் பயணிக்கும் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் விவரத்தை அனைத்து நடத்துநர்களும் போக்குவரத்து அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும். பயணிகளின் விவரத்தை தலைமையகத்துக்குத் தெரிவிக்கும்போது, குழந்தைகள் பயணம் தொடர்பான விவரத்தையும் கிளை மேலாளர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மேலாண் இயக்குநர் அனுப்பிய மற்றொரு சுற்றறிக்கையில், ‘‘திருவண்ணாமலை வழியாகச் செல்லும் விரைவுப் பேருந்துகள் திருவண்ணாமலை பேருந்துநிலையம் செல்லாமல், புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in