Published : 24 Mar 2023 06:30 AM
Last Updated : 24 Mar 2023 06:30 AM

பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: சீமான் கருத்து

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 2018-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுகவினர் மீதுவிமானநிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் புகாரை மதிமுகவினர் திரும்பப் பெற்றதால், சீமான் விடுதலை செய்யப்பட்டார்.

அதேவேளையில், காவல் துறையினர் பதிவு செய்த வழக்கின் விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சீமான் ஆஜரானார். வழக்கின் விசாரணையை ஏப்.19-ம்தேதிக்கு நீதிபதி கே.பாபு ஒத்திவைத்தார்.

இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரை, சிறப்பு முகாம் என்ற கொடுஞ்சிறைக்கு மாற்றியுள்ளனர்.

ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும். வரும் தேர்தல்களிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். இதுவரை நாங்கள் தோற்கவில்லை, மக்கள்தான் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றனர்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும். அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை எனநீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்துள்ளது.

பாஜகவினர் தாங்கள் நினைப்பதை செயல்படுத்துகின்றனர். இது, சர்வாதிகாரம் இல்லை, கொடுங்கோன்மை ஆட்சிஎன்றார். அதைத்தொடர்ந்து, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது:

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க சட்ட முன்வரைவை கொண்டுவந்தவர் கருணாநிதி. ஆனால்,பாஜகவுக்கு பயந்து முஸ்லிம்களையும், காங்கிரஸ் கட்சிக்கு பயந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் விடுவிக்க இப்போதைய திமுக அரசு பயப்படுகிறது.

சிறைவாசிகள் விடுதலைக்கு மட்டுமின்றி இன, மொழி, பண்பாடு போன்ற தேவைக்காகவும் போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் திமுகவுக்கு, நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும். எனவே, சிறைவாசிகள் விடுதலையில் தமிழக முதல்வர் கருணையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x