Published : 21 Mar 2023 02:56 PM
Last Updated : 21 Mar 2023 02:56 PM

“விவசாயிகளை வேதனையின் விளிம்புக்குத் தள்ளும் வேளாண் பட்ஜெட்” - தினகரன் கருத்து

சென்னை: "திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்புக்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண்மைக்கான நிலப்பரப்பு குறைந்து வருவதாகவும், வேளாண் நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதாகவும் வேளாண்மைத் துறை அமைச்சர் கவலை தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வேளாண்மை அல்லாத திட்டங்களுக்காக விளை நிலங்களை அரசே கையகப்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்று நடவடிக்கை என்ன என்பதை வேளாண் பட்ஜெட்டில் ஏன் சொல்லவில்லை?

நேரடி கொள்முதல் நிலையங்கள் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாமால், திறந்த வெளியில் வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதைத் தடுக்கவும், நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கும் வழிமுறைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசின் ரூ.2821 தொகையுடன் கூடுதலாக ரூ.195 வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 என்று திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் எத்தனை வேளாண் பட்ஜெட்கள் தாக்கலாவதற்கு விவசாயிகள் காத்திருக்க வேண்டுமோ என தெரியவில்லை.கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை தொகையை பெற்றுத்தர என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஏதும் அறிவிக்கவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டபோதிலும், நாட்டு மக்களுக்கு உணவு உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக திகழும் நீராதாரத்தை வளப்படுத்தும் நதிநீர் இணைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்தும் வேளாண்மை பட்ஜெட்டில் அமைச்சர் குறிப்பிட மறந்தது ஏன்?

பருவநிலை மாற்றம் காரணமாக உரிய நேரத்தில் மழை பெய்யாமல் பருவம் தவறி மழை பெய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு உரிய நீர் மேலாண்மை திட்டம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு செயல்படுத்துவது தொடர்பான திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

முருங்கை, மல்லிகை பூ உற்பத்தி இயக்கம் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்க அம்சங்களாக இருந்தாலும், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் உற்பத்திக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது போதுமானது இல்லை. மேலும், விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்துக்கு அனுமதிக்கு தடை, செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகளில் விற்பனையை தடுப்பதற்கு நடவடிக்கை ஆகியவை குறித்து வேளாண்மை பட்ஜெட்டில் ஏதும் தெரிவிக்கப்படாதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைப் போல வேளாண் விளை பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயிக்க, ஆய்வுகள் மேற்கொண்டு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட போதிலும், அதற்கான முன்னெடுப்பு மூன்றாவது வேளாண்மை பட்ஜெட்டிலும் தென்படவில்லை.மொத்தத்தில் திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்புக்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x