பெரியார் பெயரில் புதிதாக வனவிலங்கு சரணாலயம்

பெரியார் பெயரில் புதிதாக வனவிலங்கு சரணாலயம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என்னும் புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது:

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பை தடுக்கவும், கடல் மாசுபாட்டை குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்தை ரூ.2 ஆயிரம் கோடியில் உலக வங்கி நிதி உதவியுடன், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது.

பெரியார் வனவிலங்கு சரணாலயம்: நீலகிரி உயிர்கோள காப்பகத்தை தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80 ஆயிரத்து 567 ஹெக்டேர் வனப்பரப்பில் ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என்னும் புதிய சரணாலயத்தை இந்த அரசு ஏற்படுத்தும். இது மாநிலத்தின் 18-வது வனவிலங்கு சரணாலயம் ஆகும்.

பன்னாட்டு பறவைகள் மையம்: மத்திய ஆசியாவின் பறவைகள் வலசைப் பாதையில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் பறவைகள் நமது மாநிலத்துக்கு வருகை தருகின்றன. பறவைகளின் பாதுகாப்பை பேணவும், பறவையியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், இயற்கையில் பறவைகளின் பங்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையத்தை அரசு அமைக்க உள்ளது.

காலநிலை மாற்ற வீராங்கனைகள்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் முக்கிய பங்கை உணர்ந்துள்ள இந்த அரசு, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ‘காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ என்ற காலநிலை விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக முதல் கட்டமாக 500 மகளிர் சுய உதவி குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள். அவர்களுக்கு ரூ.20 கோடியில் மின் ஆட்டோக்கள் வழங்கப்படும். இந்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறைக்கு ரூ.1248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in