கிண்டி பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் - சுகாதார துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும் - சுகாதார துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

சென்னை: சென்னை கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும். பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு பணிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த அரசின் முன்னோடித் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், தொற்றாநோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, குணப்படுத்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒரு சிறப்பு முயற்சியைத் தொடங்கவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 11.82 லட்சம் நோயாளிகளுக்கு ரூ.993 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1,000 படுக்கை வசதி கொண்ட ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும். ரூ.1,020 கோடி செலவில் மதுரை, கோயம்புத்தூர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களிலுள்ள மூன்றுஅரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் கட்டப்பட்டு வரும் புதிய உயர்மருத்துவக் கட்டடங்களும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

திருச்சிராப்பள்ளி மற்றும்அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர்மருத்துவ சிகிச்சைத் தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில் ரூ.110 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டடங்களும் ரூ.147 கோடி செலவில் கட்டப்படும். மாநிலத்தின் முதல் அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டையில் 1964-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் தற்போது 100 இளங்கலை பட்டதாரிகளும், 60 முதுகலை பட்டதாரிகளும் படித்து வருகின்றனர். நாள்தோறும் ஏறத்தாழ 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in