கோவை விமான நிலையத்தில் ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’ இல்லாததால் இரு மாதங்களில் ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு

கோவை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சரக்கக வளாகம்.(கோப்பு படம்)
கோவை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சரக்கக வளாகம்.(கோப்பு படம்)
Updated on
1 min read

கோவை: கோவை விமான நிலைய சரக்கக அலுவலகத்தில் ‘ஸ்கேனர் ஆப ரேட்டர்’ பணிக்கு ஊழியர்கள் நியமனம் செய்வதில் காலதாமதம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டு சரக்கு போக்குவரத்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கோவை பீளமேடு விமான நிலைய வளாகத்தில் ஒருங் கிணைந்த சரக்கக வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப் படும் சரக்குகள் இங்கு கையாளப் படுகின்றன. சேவை இல்லாத வெளிநாடுகளுக்கு ‘பாண்டட் டிரக்’ என்ற சேவை மூலம் கோவை விமான நிலையத்தில் இருந்து சரக்குகள் அனுப்பப்படுகின்றன.

மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஸ்கேனர் ஆபரேட்டர் தொடர்பாக விமான நிலைய ஆணையகம் வெளியிட்ட புதிய விதிமுறையால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து சரக்குகள் அனுப்பும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து பல்வறு நகரங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு அனுமதி அளித்த பின் விமானங்களில் ஏற்றி செல்லப்படும்.

இதுவரை விமான நிறுவனங்களே ஊழியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணையகம்(ஏஏஐ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிய விதிமுறையை அறிவித்தது. அதன்படி விமான நிலைய ஆணையகம் சார்பில் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

புதிய விதிமுறையால் கோவை உள்பட நாடு முழுவதும் 13 விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து கையாளப்படுவது இல்லை. மதுரையில் பிரச்சினை இருந்தது. சமீபத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அதற்கென பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் இப்பிரச்சினையால் 700 டன் எடையிலான சரக்குகள் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

இதனால் ரூ.30 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இது தொடர்பாக விமான நிலைய ஆணையக தலைமையகத்திடம் தெரிவித்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

- இல.ராஜகோபால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in