சென்னை | குழாய் இணைப்பு பணி: 7 மண்டலங்களில் மார்ச் 18-ல் குடிநீர் வராது

சென்னை | குழாய் இணைப்பு பணி: 7 மண்டலங்களில் மார்ச் 18-ல் குடிநீர் வராது
Updated on
1 min read

சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணிகாரணமாக அண்ணா நகர், கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் வரும் 18-ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது.

இது தொடர்பாக சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின்கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உந்துகுழாயுடன், மவுன்ட் - பூந்தமல்லி சாலையில் சாந்தி காலனி - டிஎல்எஃப் சந்திப்பில் உள்ள பிரதான குழாயை இணைக்கும் பணி நடக்கிறது.

இதன்காரணமாக, 18-ம் தேதி காலை 6 மணி முதல் 19-ம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 7 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மூலமாகவும், தெருக்களுக்கு லாரிகள் மூலமாகவும் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் வழக்கம்போல நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in