

சென்னை: ஹோலி பண்டிகைக்காக வெளியூர் சென்ற தொழிலாளர்கள் சென்னை திரும்பாததால், தென் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் நேற்று 2-வது நாளாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் குறிப்பிட்ட சிலமாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோல, சென்னையிலும் பல இடங்களில் ஆவின் பால் விநியோகத்தில் சிலநாட்களாக சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில், தென் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்டது.
தொழிலாளர் பற்றாக்குறை: இதனால், முகவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைக்கு பால்வரத்து குறைவு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, தென் சென்னையின் பல இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.
சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் 5.50 லட்சம் லிட்டர்பால் தயார் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக, பால் கொள்முதல் பிரச்சினை நிலவுகிறது. இதுதவிர, ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊருக்குசென்ற வெளிமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால், பாலை பதப்படுத்தி, டேங்கர் லாரியில் ஏற்றுவது தாமதம் ஆகிறது.
இந்த பிரச்சினையால், தென் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் தாமதமாக விநியோகிக்கப்பட்டது. இதுபோல, மத்திய சென்னையிலும் சில இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதாக முகவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆவின் நிர்வாகம் கருத்து: இதுகுறித்து ஆவின் நிறுவன உதவி பொதுமேலாளர் ஒருவர் கூறியதாவது: தென் சென்னையில் பால் அட்டைதாரர்களுக்கு வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணிக்குள் விநியோகம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், முகவர்களுக்கு அதிகாலை 3 மணிக்கு வழங்க வேண்டிய பால் காலை 8 மணிக்கு வழங்கப்பட்டது.
இதன்காரணமாக, முகவர்கள் மூலமாக, சில்லரை கடைகள், மளிகைக் கடைகளுக்கு வழங்கும் ஆவின் பால் தாமதம் ஏற்பட்டது. தொழிலாளர் பற்றாக்குறையாலும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை புதன்கிழமை சரியாகிவிடும். இருப்பினும் சென்னையில் ஆவின் பாலுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.