ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா? - ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க ஐகோர்ட் அனுமதி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், "இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில்தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அனுமதியளித்து, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in