‘சரணடைந்த கோவை இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு’ - விசாரணை கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு

‘சரணடைந்த கோவை இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு’ - விசாரணை கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு

Published on

சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை இளைஞர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சத்தி பாண்டி என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார், சரவணம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றபோது அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். அப்போது தற்காப்பு நடவடிக்கையாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், துப்பாக்கியால் சஞ்சய்ராஜாவின் காலில் சுட்டார்.காயமடைந்த சஞ்சய்ராஜா போலீஸாரால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், "கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராஜாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்ப ராஜ், "கைது செய்யப்பட்டவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என்றார். மேலும், துப்பாக்கியால் சுடப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறி, அதற்கான புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, “தாமாக முன்வந்து சரணடைந்த பின்னரும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in