ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் - ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற 4 வேட்பாளர்கள்

தேர்தல் ஆணைய அப்டேட்
தேர்தல் ஆணைய அப்டேட்
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையில், 4 வேட்பாளர்கள் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டுவருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை இணையதளம் மூலம் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துவருகிறது. இதன்படி தேர்தல் ஆணைய இணையதளத்தில் தற்போது வரை 6 சுற்றுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,072 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,907 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 4062 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 605 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவிற்கு 264 பேர் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் 66.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 24 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

இதைத் தவிர்த்து, 36 வேட்பாளர்கள் ஒற்றை இலக்க வாக்குகளை பெற்றுள்ளனர். 4 சுயேட்சை வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர். 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் இதுவரை ஒரு வாக்கு கூட பெறவில்லை. சுயேச்சை வேட்பாளர்களில் முத்துபாவா மற்றும் தீபன் சக்கரவர்த்தி ஆகிய 2 பேர் மட்டுமே 3 இலக்கத்தில் வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்படி முத்துபாவா 294 வாக்குகளும், தீபன் சக்கரவர்த்தி 124 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in