Published : 02 Mar 2023 02:19 PM
Last Updated : 02 Mar 2023 02:19 PM

ஈரோடு கிழக்கில் 28,000 வாக்குகள் வாங்கினால் மட்டுமே டெபாசிட் - அதிமுக வேட்பாளர் நிலை என்ன?

அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் | கோப்பப் படம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 28,000 வாக்குகள் வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 7 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3,604 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 1017 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 28,000 வாக்குகள் வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். அதாவது, பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் மட்டுமே அவருக்கு டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். ஒரு தொகுதியில் 6 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தால், குறைந்தது ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல், டெபாசிட் திரும்ப கிடைக்காது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். இதன்படி ஒரு வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் மட்டுமே அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். தற்போது வரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமே டெபாசிட் வாங்கி உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட் பெற இன்னும் 8 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும். நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x