வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்த வழக்கைத் திரும்பப் பெற்றார் ஓபிஎஸ்

ஓபிஎஸ் | கோப்புப்படம்
ஓபிஎஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் திரும்பப் பெற்றுள்ளார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015 - 2016 மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 - 2018 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுத்து, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், "வருமான வரித்துறையின் நோட்டீஸை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்பப்பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in